Friday, April 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-9

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-9

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

பரத்தையிடமிருந்து மீண்ட தலைவனுக்குத் தோழி கூறியது

—-

இயற்றியவர்: ஓரம்போகியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 10

திணை:  மருதம் 

————

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி யூரன் கொடுமை

கரந்தன ளாகலி னாணிய வருமே.

——————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவியானவள், தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவுதற்குசக் காரணமாக உள்ளாள்; பயற்றின் கொத்தைப் போன்ற

பூங்கொத்திலுள்ளனவாகிய பசிய பூந்தாதுக்கள் தங்கள் மேலே படும்படி, உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட, காஞ்சிமரத்தையுடைய ஊரனது, கொடுமையை நாம் தெரிந்துகொள்ளாதபடி மறைத்தாளாதலின், அவன் நாணும்படி எதிர்கொள்ள வருகிறாள்.

———

வாசிப்பு

————-

ஆசையின் உள்மயக்கம் -நனவிலியின் பூந்தாது 

——-

இந்தக் கவிதையில் பயற்றின் (பயத்தம் பருப்பு)  கொத்தைப் போன்ற பசிய பூந்தாதுக்களும், ( மகரந்தங்கள்), உழவர்கள் வளைக்கின்ற காஞ்சி மரத்தில் கமழ்கின்ற பூக்களும் மையமான படிமங்களாயிருக்கின்றன. தலைவியானவள், தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட துயரத்தை மீறி , அவன் பரத்தையரிடம் சென்றதால் அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மீறி, அவள் அவற்றை மறைத்துக்கொண்டு வருவது பசிய பூந்தாதுக்களுக்கு உவமையாக சொல்லப்படுகிறது. ‘யாயாகியவளே’ என்ற முதற்சொல், போன கயமனாரின் கவிதையைப் போலவே  அவளைத் தாயின் இயல்புக்கும் கனிவுக்கும் உயர்த்துக்கிறது. மகரந்தங்கள் இயற்கையிலே உயிர்விருத்தியின் சேர்க்கையைத் தங்கள் இயல்பாகக்கொண்டவை; ‘பசிய’  என்ற பூந்தாதுக்களின் பெயரடையும்,  அவள் ஏற்கனவே தலைவன் செல்வம் பெற்று உயர காரணமாக இருந்தவள், ‘விழவு முதலாட்டி’ என்றதும் தலைவியை வளமையின் உயிர்ப்பாக, அந்த ஆசையின் உயிர் விசையாக  அர்த்தப்டுத்துகின்றன.  வள்மையின் மூலாதாரம், பசிய பூந்தாது, தனக்கு நேர்ந்த கொடுமையை மறக்கின்ற காரணத்தினால் தூய ஆசையின் விசை அனைத்தையும் மீறி பரிமாணம் பெறுவதைச் சொல்கிறது. ஆசையின் உள்மயக்கம் நனவிலியின் பூந்தாது. 


ஆசையின் நனவு- வளைக்கப்பட்ட பூங்கிளை

——

இதற்கு மாறானதாக இருக்கிறது ‘உழவர் வளைத்த காஞ்சி மரத்தை உடைய ஊரனான தலைவன்’. காஞ்சி மரம் (பூவரசு மரம்) மருதத்தின் கருப்பொருள். பூந்தாதெனும் நனவிலி போல உள்ளடங்கி இருப்பதல்ல, நனவாய் வெளியில் நீட்டிக்கொண்டுருக்கும், நன்றாகத் தெரியும் நனவின் காட்சி.    திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை  பூங்கொத்து உண்டாதனாலே உழவர் வளைத்த காஞ்சி மரத்தையுடைய ஊரன் என்றதனானே, தம்மிடத்து வேட்கை கொண்டமை உணர்ந்ததனானே பரத்தையரால் வளைக்கப்படும் இயல்பினன் என்று விளக்கமளிக்கிறது. ஆசையின் உள்மயக்கம் நனவிலியின் பூந்தாதாய் இருக்கையில் ஆசையின் நனவோ வளைக்கப்பட்ட பூங்கிளையாய் இருக்கிறது.

——-

நிலக்காட்சியும் இழப்பும்

—-

ஓரம்போகியாரின் இந்தக் கவிதை நம்மை உழவர் பூரசு மரங்களின் கிளைகளை வளைக்கும் ஒரு நிலக்கட்ட்சிக்கு அழைத்துச் செல்கிறது. அதன் அழுத்தம் விவசாய விபரத்தைச் சொல்வதில் இருக்கிறது. உழவு என்பது இயற்கை வளைக்கப்பட்டதும், மனித நாகரீகத்தினுள் கொண்டுவரப்பட்டதும் எனவு நனவு நிலை என்பதாகவும் பொருள்படும். நனவின் காட்சியை நனவிலிப் பூந்தாதுவின் இழப்பாக கவிதை காட்சிப்படுத்துவதாக நாம் இக்கவிதையை வாசிக்கலாம். மகரந்தங்களின் சேர்க்கையில் அவைதான் அழிய பூக்கள்  பரிணமிக்கின்றன.


——

மூன்றாம் நபரின் பார்வையில் மறைத்தலின் சக்தி

——

கவிதையைச் சொல்கிறவள் தலைவியின் தோழி; அவள் தலைவனுக்குக் கூறுகிறாள். தலைவன் கவிதையினுள் இல்லாத உருவாக (absent figure) இருக்கிறான். முன்றாவது நபரின் பார்வையில் (gaze) , அதாவது தலைவி மறைத்துவிட்ட துயரத்தின் பேசுகுரலாக, அவளுடைய உள் மனதின், வெளிப்பாடாக, அவளுடைய ஆசை, துயரம் இரண்டின் வெளிப்பாடாகவும்  இந்தத் தோழி கூற்று அமைந்திருக்கிறது. அவள் மறைத்த உணர்ச்சியின் சக்தி என்ன என்பதைப் பேசுகிறாள். அது தலைவனை நாணமுறச்செய்யும் என்று, ‘கொடுமை கரந்தனள் ஆகலின் நாணிய வருமே’ என்று சொல்கிறாள்.  


நனவு பொதுவாக நாணுவதில்லை.