Sunday, March 10, 2013

பூரண மதுவிலக்கே இன்றைய தேவை


பூரண மதுவிலக்கினை தமிழ் நாட்டில் அமல்படுத்தியே ஆகவேண்டிய சூழல் நிலவுவதாகவே நான் நம்புகிறேன். முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மது அடிமைகள் மிக அதிகமான அளவில்  பெருத்துள்ளனர். தனி நபர்கள் ஆரோக்கியம் கெட்டு, குடும்பங்கள் சீரழிய குடி இன்று தமிழகத்தின் தலையாய சமூகச் சீர்கேடாக உருவெடுத்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு தலைமுறையே முழுமையாகக் குடியினால் சீரழிந்து போயிருக்கிறது. இளம் தலைமுறையினரோ மேலும் மேலும் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இன்றைக்கு குடியின் ஆதிக்கத்துக்கு உட்படாத கல்லூரி வளாகங்களோ விடுதிகளோ இல்லை எனும் அளவுக்கு குடி இளைஞர்களின் வாழ்வினை ஆக்கிரமித்திருக்கிறது. எந்த குறைந்த பட்ச வாழ்க்கைக்கும் லாயக்கற்ற ஊளைச் சதை தொங்க முப்பது முப்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நரை, மூப்பு எய்திய சோதாக்களால்  நிரம்பிய சமூகமாக ஏற்கனவே பலவீனப்பட்டு கிடக்கிறது தமிழகம். சோப்ளாங்கிகளுக்கு வர்க்கமில்லை; ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள், படித்தவர், படிக்காதவர்கள் என்று எங்கும் அவர்கள் விரவியிருக்கிறார்கள். 

உடல் ஆரோக்கியத்தை பேணும் பண்பாடற்ற தமிழ் சமூகம் குறித்தான இரண்டு ஆய்வேடுகளை சமீபத்தில் நான் படித்தேன். இந்த ஆய்வேடுகளின் வழி தமிழ் சமூக வாழ்வு குறித்து வெளிப்படுகின்ற சில பொது முடிவுகளை கீழே தருகிறேன்.

  1. நடுத்தர வர்க்க  பெண்கள் இன்னும் அதிக அளவில் குடிக்கு அடிமையாகவில்லை என்றாலும் அவர்களும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான பிரிவினை மிக அதிகமாக மது அருந்துவதை ஒட்டி ஏற்படுகிறது.
  2. நாற்பது, நாற்பத்தைந்து வயதிலேயே தமிழ் ஆண்கள் கிழப்பருவம் அடைந்துவிட்டதாக நம்புகிறார்கள். நாற்பத்தைந்திலிருந்து ஐம்பத்தைந்து வயதிற்குள் மரணங்கள் சம்பவிப்பதும் அதிகமாகிவருகிறது. உட்கார்ந்த இடத்திலேயே உளுத்துப்போன உடல்களாக தமிழ் ஆணுடல்கள் இருக்கின்றபடியால் குடியும் சேரும்போது முப்பத்தைந்து வயது வாக்கில் ஆண்மைக்குறைவு பெரும்பான்மையோரை பீடிக்கின்றது. 
  3. குடிப்பதற்கு ஏற்ற சத்தான உணவினை தமிழர்கள் சாப்பிடுவதில்லை. ஆக்கக்கேடான கண்ட எண்ணையிலும் சமைத்த பதார்த்தங்களை தின்று வைக்கின்றனர்.

இந்த ஆய்வுகள் டாஸ்மாக்கில் மது வியாபாரம் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கின்ற வரி வருமானத்தை கீழ்வருமாறு அட்டவணைப்படுத்துகின்றன;


Fiscal Year
Revenue in Crores
 % Change
2002 - 03
2,828.09

2003 - 04
3,639
pastedGraphic.pdf 28.67%
2004 - 05
4,872
pastedGraphic_1.pdf 33.88%
2005 - 06
6,086.95
pastedGraphic_2.pdf 24.94%
2006 - 07
7,300
pastedGraphic_3.pdf 19.93%
2007 - 08
8,822
pastedGraphic_4.pdf 20.85%
2008 - 09
10,601.5
pastedGraphic_5.pdf 20.17%
2009 - 10
12,491
pastedGraphic_6.pdf 17.82%
2010 - 11
14,965.42
pastedGraphic_7.pdf 19.80%
2011 - 12
18,081.16
pastedGraphic_8.pdf 20.82%



2002 ஆம் ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 2828 கோடி ரூபாய் என்றால் 2012 இல் 18000 சொச்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வருமானம் வெறும் வரி விதிப்பினால் வருகிற வருமானம் மட்டுமே. மொத்த மது விற்பனை என்பது பதினெட்டாயிரம் கோடியிலிருந்து பத்து மடங்கேனும் அதிகம் இருக்க வேண்டும். இந்த அளவுக்கு மது விற்பனை இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இளைஞர்களும், சிறுவர்களுமே குடிப்பவர்களாக இருக்கவேண்டும் என்பது இந்தப் புள்ளிவிபரத்திலிருந்து  உறுதியாகத் தெரிகிறது. இன்னும் பத்து ஆண்டுகள் இந்த நிலைமை நீடிக்குமென்றால் தமிழ்நாடு சோதா சோப்ளாங்கி நோயாளிகளின் மாநிலமாக மாறிவிடும்.  சினிமா தொலைக்காட்சி மாயைகளில் ஏற்கனவே தன்னைத் தொலைத்து உட்கார்ந்திருக்கும் தமிழ் சமூகம் குடியினால் தன் எதிர்காலத்தை மீட்க முடியாதபடி இழக்கும் அபாயம் இருக்கிறது.

காந்தியவாதி சசிபெருமாளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அவருக்கு வலிந்த சிகிக்சை அளித்து அரசு முடிவுக்குக்கொண்டுவந்திருக்கலாம் ஆனால் பூரண மதுவிலக்கினை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான தேவையை அவர் போராட்டம் பொது வெளிக்குக் கொண்டுவந்துவிட்டதெனவே நான் நினைக்கிறேன்.   முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடைகளை நிறுவி மேலும் மேலும் அரசுக்கு வருமானத்தை பெருக்குவதிலும் அந்த வருமானத்தை இடை மறித்து கொள்ளையடிக்கும் தரகர்களை பிரமுகர்கள் ஆக்குவதிலும் மட்டுமே முனைப்போடு இருக்கிற எந்த அரசும் மக்களின் நலன்களில் எந்த அக்கறையும் உடைய அரசாகத் தன்னை சொல்லிக்கொள்ள இயலாது என்பதினையும் பெரியவர் சசிபெருமாளின் போராட்டம் பொது வெளியில் உணர்த்திவிட்டது.

மது விற்பனையையும் மது அருந்துதலையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம் மதுவின் தீமைகளை நம் சமூகத்தில் கட்டுப்படுத்திவிடலாம் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; அதற்கான காலம் கடந்துவிட்டது. பூரண மதுவிலக்கே இன்றைய தேவை. 


1 comment:

Venkatesan Chakaravarthy said...

மதுவுக்கு 55% விற்பனை வரி விதிக்கப்படுகிறது. அது தவிர எக்சைஸ் வரி, அரசே சில்லறை விற்பனையாளராகவும் இருப்பதால் கிடைக்கும் லாபம் போன்றவற்றையும் கணக்கில் கொண்டால் அரசு வருமானத்தை விட விற்பனை மதிப்பு இரு மடங்காக இருக்கலாம். அதன்படி தானைத் தமிழர்கள் வருடத்திற்கு 36000 கோடிக்கு குடிக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு நூறு கோடி! நாடு உருப்படும்.