Tuesday, October 30, 2012

பால் வேலரியின் கவிதை ‘அகம்’

பால் வேலரியின் கவிதை

பால் வேலரி 


'அகம்




தொங்கும் சங்கிலிகளின் எடை அழுந்தும்

ஒரு அடிமை, நீண்ட கண்களிளால்

என் தொட்டிகளில் தண்ணீர் மாற்றுகிறாள்

அருகாமையிலுள்ள கண்ணாடிகளில் தன்னைப் புதைகிறாள்

தன் தூய விரல்களினால் அந்தப் புதிர் படுக்கையில்

தாராளமாய் அளைகிறாள்

அந்த சுவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணை இருத்துகிறாள்

அந்தப் பெண்ணோ, என் பகற்கனவுகளில் கண்ணியமாய் சுற்றித் திரிந்து

என் கண நேர கண்ணோட்டத்தினூடே கடந்து செல்கிறாள்

- அதன் இன்மையை சிதைக்காமல் -

கண்ணாடி சூரிய வெளிச்சத்தினூடே கடந்து செல்வதைப் போல

பகுத்தறிவின் கருவிகளை சுதந்திரமாய் விட்டு விட்டு




குறிப்பு: சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் பால் வேலரியின் கட்டுரை ‘நடத்தலும் நடனமும்’ என்ற கட்டுரையை ‘அஸ்வமேதா’ சிற்றிதழுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த மொழிபெயர்ப்போ, பத்திரிக்கையோ இப்போது என் கைவசம் இல்லை. காலத்தின் கைபிசகில் என் பழைய கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என் கோப்புகளில் சேகரமாகமல் போய்விட்டன. அதைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றாலும் எனக்கு சில references தேவைப்படும்போது பழைய எழுத்துக்கள் இல்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது. பால் வேலரியின் ‘நடத்தலும், நடனமும்’ கட்டுரையைப் படித்துவிட்டு இந்தக் கவிதையை வாசிப்பது நல்லது.

பால் வேலரியின் “அகம்” என்ற இந்தக் கவிதை (ஆங்கிலத் தலைப்பு “Interior”) சார்த்தரினால் அவருடைய புகழ்பெற்ற புத்தகமான What is Literature இல் ஆராயப்படுகிறது. கவிதையை விடுத்து உரைநடையை சார்த்தர் தன்னுடைய கடப்பாடுடைய இலக்கியத்திற்கு தெரிவு செய்வதற்கான காரணத்தை சொல்லும்போது கவிதை மொழியை உரைநடையிலிருந்து வேறுபடுத்த சார்த்தர் வேலரியின் இந்தக் கவிதையை வைத்து விளக்குவார்.

இந்தக் கவிதை   பகற்கனவின் உள்ளார்ந்த உலகத்திற்கும், வெளியுலகினை அவதானிப்பதற்கும், பகுத்தறிவதற்கும் உள்ள வேறுபாட்டினை வெளிப்படுத்துகிறது. பொருளாயப்படுத்தும் பார்வையிலிருந்து இந்தக் கவிதையில் வரும் பெண் தப்பிவிடுகிறாள்; இன்மையாக இருக்கிறாள்.

இன்மை/இருப்பு என்பதை இலக்கிய மொழி எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பற்றி போர்ஹெஸ்-மௌனி கட்டுரைத் தொடரில் இந்தக் கவிதையை குறித்து பேச வேண்டியிருக்கிறது. அதற்காக இருக்கட்டுமே என்று முன்கூட்டியே இந்தக் கவிதை மொழிபெயர்த்து வெளியிடுகிறேன்.

Sunday, October 21, 2012

டிவிட்டர் கதைகள் 1-20

1.கதை நீட்சி

    'பஸ்ஸிலிருந்து இறங்க மறுத்தவள் கதை' படித்து முடித்தபோது என்னை பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கிப் போட்டனர் கதை நீள்வது அறியாமல்.

 2 ஆள் மாறாட்டம்

அரிதாரம் கலைந்தவுடன் ஆள்மாறாட்டம் உறுதியாகிவிட்டது அவள் பிரும்மமல்ல மாயையே. என்ன, கண்ணுக்குப் புலனாகிறாள்.

3. நுண்ணுணர்வு

கிழவன் ஆட்டெலும்பை வைத்து ஆட்டுக்கறி வதக்கினான். சுற்றிலும் ஆடுகள் தன் போக்கில் புல் மேய்ந்து கொண்டிருந்தன.

4. கற்பனை வளம்

ஒற்றைச் செருப்பை வைத்து அவள் முழு லாவண்யத்தையும் கற்பனை செய்தான். தாடை இறக்கமும் கோரப்பல் வரிசையும் கற்பனைக்குத் தப்பின.


5 சரித்திரம்

மீண்டும் ஆள் மாறாட்டம்! ஆனால் இம்முறை பிடிபடவில்லை. ஒரிஜினல் யாரென்று அனைவருக்கும் மறந்துவிட்டது.

6 வைராக்கியம்

பாலவனவாசி மீன் சாப்பிடமாட்டேன் என்று ஏன் சபதம் மேற்கொள்ள வேண்டும்? ஆனாலும் சபதமின்றி வைராக்கியம் ஏது? சபலம், சலனம், சபதம், சடலம் என எந்த வார்த்தையும் இங்கே பொருந்தும்.

7 குற்ற உணர்வு

அப்பம் பிரித்து கொடுத்த பூனைக்கு குற்றவுணர்ச்சி மிகுந்து விட்டது. எலிகளையும் விழுங்கி விட்டது.

8. ஓற்றை எழுத்து கவிதை

இன்னும் சுருக்கமாய் சொல் என்றார்கள். ஒற்றை எழுத்தில் கவிதை எங்கே என்று தொடை தட்டினார்கள். "வோ"

9. ஹெகலின் கள்ளக்குழந்தைகள்

ஹெகலின் கள்ளக் குழந்தைகள் வரலாறெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்ற அரசன் தன் குழந்தைக்கு இளவரசு பட்டம் கட்டவில்லை. வரலாறு நகர்ந்தபோது இளவரசர்கள் தேவைப்படவில்லை

10 லயம்

கரும்பலகையில் சாக்கட்டியினால் கிறீச்சிட்டபோது தோன்றியது: லயம் என்பதொரு மாயம். அது மனிதர்களுக்கு மேன்மையுணர்வு சாத்தியம் என்று பொய்யுரைக்கிறது.

11 பெருந்தன்மை

இரு ஆண்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார்கள் என்ற மட்டில் பழைய கதைதான். யாருக்கும் விட்டுக்கொடுக்க பெருந்தன்மையில்லை. மூவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

12 படக்கதை

படத்திற்கேற்ப கதை எழுத வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. முட்டைக்கு மயிர் முளைத்த பிம்பம் கதாநாயகனாகியது.

13 வேகம்

 வேகம் என்றால் என்ன என்று இந்த உலகம் அறிந்திருக்கவில்லையே  என ஆமையிடம் தோற்ற முயலுக்கு வருத்தமாக இருந்தது.

14 முகமூடி

அவள் முகமூடியை கழற்றி மேஜையின் மேல் வைத்தாள். முகமே முகமூடியாகியிருந்தது.

15 நீல நிற ஜீன்ஸ்

நீல நிற ஜீன்ஸ் அணிந்த புத்தன் எல்லாவற்றையும் பார்த்து அதிசயிக்கச் சொன்னான். நீல நிற ஜீன்ஸையே எல்லோரும் பார்த்து அதிசயித்தார்கள்

16. ஆமைக் குஞ்சுகள்

ஆமைக் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவந்து கடலை அடைய ஓரடி இடைவெளியே இருக்கும். குஞ்சு பொரிந்து கடலடைவதற்குள் கடல் பருந்துகள் தூக்கிச் சென்றன.

17. டெலிபதி

டிவிட்டர், தொலைபேசி, ஃபேஸ்புக், புறா, மேகம் என எல்லாம் தோற்றாலும் இருக்கவே இருக்கிறது டெலிபதி என்று கூறி பிரிந்தார்கள். மௌனம் நிம்மதியாயிற்று.

18. ஆலிங்கனம்

பீமனின் இரும்புப் பிரதிமையை நொறுக்கிவிட்டு அழுதான் குருட்டு அரசன். குழந்தையாய் விளையாடியபோது துரியனேது பீமனேது என்ற நினைப்பில்.

19. சுழல் நாற்காலி

சுழல் நாற்காலியில் சுழன்றபடி கட கடவென்று சிரித்து கடைசி காட்சியில் தன்னை வெளிக்காட்டும் வேதாந்தி இந்த மர்ம நாவலில் வெளிப்படாமல் போனது நாற்காலியின் துரதிருஷ்டம்தான். அது சரியாய் சுழலவில்லை.

20. மர்ம முடிச்சு

கடைசியில் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்து விட்டது. புத்தனை விஷ்ணு அவதாரமாக்கியது திட்டமிட்ட சதியல்ல. திட்டமிடப்படாத சதி. அவ்வளவுதான்.

Saturday, October 6, 2012

நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெஸின் கவிதைகளும் பகுதி III


முகவிலாசமும் முகத்துலக்கமும் மௌனி போர்ஹெஸை வாசித்திருக்கிறார் என்பதைப் படித்ததால் ஏற்பட்டது என்று பகுதி 2 இல் எழுதியதைத் தொடர்ந்து ஏதேதோ யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன. மௌனிக்கும் போர்ஹெஸுக்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. தன் அடையாளம்,  பிறன்மை (other) என்பதன் விளையாட்டினைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும் போர்ஹெஸிடமும் காணலாம். தன் அடையாளம் , பிறன்மை என்பவற்றை எதிரிடையாகக் காண்பதன் அபத்தம் கூட இந்த விளையாட்டின் கிரியைகளில் ஒன்று; மாயையின் பூச்சு அடர்ந்து பிளவே இயல்பனெ அறியப்படுவதை என்னவென்று சொல்ல? தன் அடையாளம் எங்கே முடிகிறது? பிறன்மை எங்கே ஆரம்பிக்கிறது?

தத்துவத்தில் மார்டின் புயுபரின் ‘I and Thou’ என்ற சிறிய ஆனால் முக்கியமான நூலில் கட்டமைக்கப்பட்ட தன்னிலை-பிறன்மை பிரச்சினைப்பாடு  (problematic)  தத்துவம் என்று மட்டுமில்லாமல் மானிடவியல், இறையியல், சமூக அறிவியல், அரசியல், இலக்கியம், இலக்கிய கோட்பாடு ஆகிய துறைகளில் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளது. புயுபரின் பிரச்சினைப்பாடு ‘நீ’ என்பதினை அடுத்த ஆள் என்று மட்டுமில்லாமல், கடவுள், இயற்கை என தான் என் உணரப்பட்டது தவிர்த்த அனைத்திற்குமானதாக விஸ்தரித்தது. அதாவது ‘நீ’ எனப்படுவது ‘பிறன்மை’ என விரிவு கண்டது. தன்னிலைக்கும் அல்லது தன்னடையாளத்திற்கும் பிறன்மைக்கும் உள்ள உறவிவின் தன்மையே அறவியலின் நம் சமகால தத்துவத்தின் அடிப்படையென மாறியுள்ளது. புயுபரின் நேரடியான தாக்கத்திற்கு உள்ளான சார்த்தர் இருத்தலியல் சூழ்நிலையின் இறுக்கத்திலும் பரிதவிப்பிலும் Other is hell என்ற தத்துவ சறுக்கலுக்கு ஆட்பட்டதும் அதனால் அவருக்கும் காம்யுவுக்கும் இடையில் மோதல் முற்றியதும் பிரசித்தமான ஒன்றே. சார்த்தர் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொண்டதாக அறிவித்தபின்பும், தன் சிந்தனை சறுக்கலின் வெளிப்பாடக அமைந்துவிட்ட No Exit நாடகத்தினை நிராகரித்த பின்னரும் கூட  சார்த்தரின் சறுக்கல் இன்றுவரை அவருடைய தத்துவத்தில் படிந்த அகலாக்கறையாகவே கருதப்படுகிறது. தவிர, எழுதப்பட்ட அத்தனை நவீன கவிதைகளையுமே தான் - பிறன்மை என்பவனவற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு கூட பிரசித்தம். 

மார்டின் புயுபரின் வாழ்க்கை வராலாற்றை Martin Buber: The Life of Dialogue என்ற புத்தகமாக எழுதிய மௌரிஸ் ஃப்ரீட்மன் புயுபரின் சிந்தனை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் சிந்தனையிலும், பண்பாட்டிலும் எவ்வளவு தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் விவரித்துள்ளார். பல மதங்களிடை உரையாடல்கள், இடைசமய நம்பிக்கைகள், மனித உரிமை போராட்டங்கள், போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன தன்னிலையயும் தன் அடையாளத்தையும் விட பிறன்மைக்கும், பிற அடையாளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே அறம் என்ற நிலைப்பாட்டினை பியுபரின் சிந்தனையிலிருந்தே பெற்றுகொண்டன என ஃபிரீட்மன் விவரிக்கிறார். பால் டில்லிச், ரெய்ன்ஹோல்ட் நீபுர் ஆகிய இறையியல் சிந்தனையாளர்களையும் பியுபரின் சிந்தனைக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதைச் சொல்கிறார்கள். மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963 இல் எழுதிய பிர்மிங்ஹாம் ஜெயிலிலிருந்து ஒரு கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டுகிறார். மதங்களின் இறுதி விதிகளை உதறி இங்கே இப்போது நடக்கும் மானுட நிகழ்வுகளினூடே நடக்கும் உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலமே மனித குலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்த முடியும் என்று வாதிட்ட பியுபர் தினசரி வாழ்க்கையின் உரையாடல்கள், தான் -மற்றது என்ற தன்னிலை பொருளுலகு உரையாடலாகவும் தான் -மற்றவர் என்ற தான்- கடவுள் உள்ளிட்ட மற்ற மனிதர்களின் உலகு என்ற உரையாடலாகவும் பரிணமிக்கிறது என்று விளக்கினார். “மீண்டும் உன்னிடம் சிக்கிக்கொண்டேன்’ என்ற ரமேஷ்-பிரேமின் கவிதை வரியும் “மகாமசானத்தில் தெரியாதே என்று இறந்தார் என் கடவுள்” என்ற சுகுமாரனின் கவிதை வரியும் புயுபர் விவரிக்கும் உரையாடல் வகைகளே.

மார்டின் லூதர் கிங் ஜூனியர் தன்னுடைய பிர்மிங்ஹாம் சிறைக்கடிதத்தில் புயுபரை மேற்கோள் காட்டி இன உறவுகளை தான் - மற்றது என பிரித்து தன்னை மனித உலகத்தைச் சேர்ந்தவராகவும் மற்ற இனங்களை உயிரற்ற ஜடங்களின் உலகை சார்ந்தவையாகவும் குறுக்குவதே  இனப்போர்களின் வன்முறைக்கான ஆதரமாகிறது என்று எழுதுகிறார். தமிழர்- சிங்களவர், தமிழர்-இந்தியர், இந்தியர்- ஐரோப்பியர், கீழைத்தேயம்-மேற்குலகு எனப் புழங்கி வரும் சொல்லாடல்களும் கதையாடல்களும் என்ன மாதிரியான உரையாடல் பாங்குகளை ஆதாரமாகக் கொள்கின்றன என்று பார்ப்பது அவசியம். அந்த பிரஞ்காபூர்வமான சிந்தைனையை நோக்கியே தன்னிலையை எழுதிப் பார்த்து அறிதல், மௌனியையும் போர்ஹெஸையும் வாசித்தல் ஆகிய என்னுடைய யத்தனங்கள் இருக்கின்றன. 

முதலில் போர்ஹெஸின் இரு கவிதைகளைப் படித்துவிட்டு போரஹெஸ் மௌனி வாசிப்பிற்கு மீண்டும் வருவோம். தன்னிலையின் நிலைப்பாடுகளை முழுமையாக மறுதளித்துவிட்டு பிற்னமையின் ஆனந்தத்தில் திளைத்த கவிதைகளாக போர்ஹெஸின் ‘இரவின் வரலாறு’, ‘ஒரு பூனையை நோக்கி’ என்ற இரு கவிதைகளைச் சொல்லலாம்.

இரவின் வரலாறு

தொடர்ந்து பல தலைமுறைகளாக
ஆண்கள் இரவினை கட்டமைத்தார்கள்
முதலில் அவள் குருட்டுத்தன்மையாய் இருந்தாள்
வெற்றுப் பாதங்களைக் கிழிக்கும் முட்களாய்
ஓநாய்களுக்கான பயமாய்

இரு அந்திக் கருக்கல்களைப் பிரிக்கும்
இடைவெளி நிழலுக்கான
வார்த்தையைப் போலியாய் சமைத்தது யாரெனெ
என்றுமே அறியப்போவதில்லை

எந்தக் காலத்தில் அது
நட்சத்திர மணித்தியாலங்கள் என 
பொருள்கொண்டதென 
என்றுமே நாம் அறியமாட்டோம்

மற்றவர்கள் அந்த தொன்மத்தை 
உருவாக்கினார்கள்
அவர்கள் அவளை 
நம் தலைவிதியைச் சுழற்றும்
கலைக்கப்படாத விதிகளின் தாயாக்கினார்கள்
அவளுக்கு அவர்கள் பெண் ஆடுகளையும்
தன் சாவினை தானே கூவும் சேவலையும்
 பலியிட்டனர்

சால்டியன்கள்⁠1 அவளுக்கு பன்னிரெண்டு வீடுகளையும்
ஜீனோவுக்கு முடிவற்ற வார்த்தைகளையும் ஒதுக்கினர்
அவள் லத்தீனின் அறுசீர் செய்யுளடியாய் உருவமெடுத்து
பாஸ்கலை பீதி வசப்பட வைத்தாள்
லூயி தி லியோன்⁠2 அவளிடத்து 
தன் அடிபட்ட ஆத்மாவுக்கான 
தாயகத்தைக் கண்டார்
இப்போது நாம் அவளை
தீர்க்கமுடியாத மதுத் தேறலாய் உணர்கிறோம்
யாருமே அவளை தலை சுற்றலின்றி 
உற்று நோக்க முடியாது
மேலும் காலம் அவளின் மேல் நித்தியத்தை ஏற்றிவிட்டது

நம் பலகீனமான கருவிகளான 
கண்களுக்காக என்றில்லாவிட்டால்
அவள் இருக்கவே மாட்டாள் என்பதினை 
நினைக்கும்போது











ஒரு பூனைக்கு

கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லை
ஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை

நிலவொளியில்
நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியான
நீயே அந்த சிறுத்தை

விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படி 
நாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்
கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விட
இன்னும் தொலைவிலானது
உன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு ரகசியம்
உன் இடுப்பு உன்னைச் சீராட்டித் தடவும் என் கையை
அனுமதிக்கிறது
நீண்ட காலமானதால் மறந்துவிட்ட கடந்த காலம்
நம்ப முடியாத கையின் காதலை
உன்னை ஏற்றுக்கொள்ள வைக்கிறது
நீ இன்னொரு காலத்தைச் சேர்ந்தவள்; ஒரு கனவைப் 
போல கட்டுண்ட இடமொன்றின் பிரபு 








நான்கு விதமான தன்னிலை (I) பிறன்மை விளையாட்டுக்கள் மௌனியையும் போர்ஹெஸையும் வாசிப்பதில் தொழிற்படுகின்றன. 

முதன்மையாக இவர்களின் இலக்கியப் பிரதிகள் அவற்றின் விசித்திர வசீகரத்தினால் ‘நம்’ கலை இலக்கிய பாரம்பரியத்தில் அவற்றுக்கு என்ன இடம் என்று உடனடியாக சிந்திக்கத் தூண்டுகின்றன. இரண்டாவதாக எழுதும் தன்னிலைக்கும், எழுதப்பட்ட பிரதிக்குமான உறவு, மூன்றாவதாக அளவிலிக்கும் அளவானதற்குமான உறவுகள், நான்காவதாக கனவு-நனவு, நினைவு-நடப்பு, நிகழ்வு- காலாதீதம் ஆகியவற்றின் ஊடாட்டங்கள். 

---தொடரும்


1 பாபிலோனை 625-539 வரை ஆண்ட மக்கள்  சால்டியன்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் வானியல் நிபுணர்களாகவும் ஜோதிடர்களாகவும் விளங்கினர்.
2 லூயி தி லியோன் 
பார்க்க