Saturday, November 19, 2011

என்று ஒரு ஆறுதல்



"முள்ளிவாய்க்கால்" ஓவியம் அபராஜிதன் ஆதிமூலம் Acrylic on canvas 40"x75" Image courtesy Singh and Thapar Projects 


நூலகத்தை ஜாதிக்காய் பெட்டிகளில்
அடைத்து இறுக்கி ஆணியடித்து
தொழுவத்து குடிசையில் வைத்தாயிற்று
பெற்றோரை நடுக்கூடத்தில்

மார்போடு அணைத்த குழந்தை
கையடக்க மலிவுப் பதிப்பு
கந்த சஷ்டிக் கவசம்

அம்மியையும் குழவியையும்
எடுத்துச் செல்லவியலா துக்கத்தில்
ஒரு கையில் மாங்கன்று
மறு கையில் கறிவேப்பிலைச் செடி
ஏந்தி நிற்கும் துணைவி

கூடுதல் பாதுகாப்பிற்கு
வள்ளி திருமணம் நாடகம்
ரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பு

கன்றுகள் பயணம் பிழைக்காவிடில்
மறு ஏற்பாடென
சிறு சாக்கு நிறைய மாங்கொட்டைகள்
சீரகம் கொத்துமல்லி
வேறு என்ன என்ற திகைப்பில்
ஒரு பிடி பச்சை விரலி மஞ்சள்

எந்த ஊரிலும்
விரிந்த வானும்
ஆழ் கடலும்
சேரும் கோடு
கரு நீலம்தான்
என்று ஒரு ஆறுதல்.





No comments: