Wednesday, August 24, 2011

நீலத் திமிங்கலங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குழும விவாதத்திலிருந்து:

நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று அறிந்தே இருக்கிறேன். நான் உட்கார்ந்திருக்கும் இருக்கை அப்படி.  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யோசனை உங்களுக்கு பெரிதும் சிரமமான காரியம் என்றாலும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும் இல்ல்லையா? பின் நவீன சிந்தனைகளை தமிழில் அறிமுகப்படுத்தியவர்களே நீலத்திமிங்கலங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். திமிங்கலங்களை பற்றி உருப்படியாக ஒரு கட்டுரையைக்கூட விட்டுச் செல்லாமல் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். சிலக் கலைச்சொற்களை மட்டுமே அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நான் மட்டுமே பயன்படுத்திகொண்டிருக்கிறேன்.

இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கிய வரலாற்றில் உச்சங்களைத் தொட்ட பல படைப்புகளை நான் எழுதியிருக்கிறேன் என்பது நீங்கள் அறிந்ததுதான். உச்சங்களைத் தொட்டேனே தவிர ஆழங்களைத் தொடவில்லை. திமிங்கலங்கள் ஆழங்களில்தான் வசிக்கின்றன என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார். ஏதேனும் ஒரு கவிதையிலாவது ஒரு உபதேசமாவது நீலத்திமிங்கலங்களைப் பற்றி செய்திருக்கிறாரா? சாதாரண ஆசிரியர் அவர். தன் வீடு, தன் தோட்டத்தைத் தவிர அவர் எங்கேயுமே வெளியிலேயே சென்றதில்லை. கடற்கரையைப் போய் கூட பார்த்ததில்லை. கடலாழத்தைப் போய் பார்ப்பதற்கான வாய்ப்பே அவருக்கு இல்லை. நீலத்திமிங்கலங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் எவ்வளவு கர்வியாய் அவர் இருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஆம், அவருடைய படைப்பு அவருக்குத் தரும் ஊக்கம் அது.

என் குருவின் குரு நீலத்திமிங்கலங்களை நாம் அன்போடு நம் மண் சார்ந்த அணுகுமுறையோடு கட்டித் தழுவ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்; திமிங்கலங்கள் நீரில்வசிப்பப்பவை என்பதை அவர் அறிந்தே இருந்தாலும் கூட. அவர் அதையே கீழத்தேய சிந்தனை என்றும் அவர் நேர்பேச்சில் கூறியிருக்கிறார். அவர் நேர்பேச்சில் மட்டுமே எல்லாவற்றையும் கூறுவார். எதையுமே எழுதமாட்டார். ஆம், அதனால்தான் அவரை நான் முதல் சிந்தனையாளர் என்கிறேன்.

நாஞ்சில் நாட்டு மகாத்மியத்தில் நீலத்திமிங்கலங்களுக்கு இடமே இல்லை. திமிங்கலங்களைப் பற்றி ஒரே ஒரு பிள்ளைதான் எழுதிருக்கிறார். அவர் நாஞ்சில் நாட்டுப் பிள்ளை இல்லை சைவப்பிள்ளை!

அவர் பெயர் டி.ஏ.சோமசுந்தரம் பிள்ளை. அவருக்கு ஆங்கிலமும் நன்றாகத் தெரியும். சிவபெருமான் ஆலகால விஷத்தை விழுங்கியதையும் பார்வதி தேவி அவர் கழுத்தை எட்டிப்பிடித்தையும் அப்போது அவர் கண்டம் நீலம் பாரித்ததையும் நீலத்திமிங்கலங்களையும் அவர் குறியீட்டு முறையில் ஒப்பிட்டு போன  நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர் எழுதியிருக்கிறார்.  டி.ஏ.சோமசுந்தரம் பிள்ளையின் நூலைப்பற்றி சென்னைக்கு ஃபோன் போட்டு பலரிடம் விசாரித்தேன். யாருக்குமே எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பேச்சிழந்து நின்றேன்.
அன்றைக்கு மிகவும் பெரிய பதவி வகித்த காங்கிரஸின் மூத்த தலைவரிடம் ஃபோன் போட்டு திமிங்கலங்களைப் பற்றி விசாரித்தேன். ‘எழுத்தாளர் தம்பி! திமிங்கலங்கள் எங்கேயெல்லாம் இருக்கின்றன தெரியுமா?’ என்று அவர்  சொன்ன விஷயங்களைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அப்படியே கால் தளர்ந்து உட்கார்ந்து விட்டேன்.

திமிங்கலங்களைப் பற்றி என்னுடைய சிந்தனை எல்லாவற்றையுமே இந்துத்துவா என்று குருவி மண்டை ஆதரவாளர்களும், அயோக்கியர்களும், இடதுசாரிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். நானும் இளமைத் துடிப்பில் தொடர்ந்து அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறேன். நீலத்திமிங்கலங்களைப் பார்த்தால் உப்புக் கண்டம் போட்டு பல நாட்களுக்கு உண்ணலாமென்று இப்பொழுதெல்லாம் என் வாயில் எச்சில் ஊறுவதேயில்லை. இந்தப் பார்வையை நான் பெறுவதற்கு இந்திய ஞான மரபின் பௌத்தமும் தாந்த்ரீகமும் மட்டுமே காரணம். இந்த மொழிபு எப்படி இந்துத்துவா சிந்தனை ஆகும் என்று எனக்குப் புரியவேயில்லை. இதை இதையும் விட எளிமையாக  எப்படி எழுதுவது என்றும் தெரியவில்லை.

எல்லொருமே ஒரு ஜென் தருணத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான் போலும். பூனையோடு எனக்கு ஏற்பட்ட ஜென் தருணத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பூனையும் நானும்  ஒரு மூலையில் மாட்டிக்கொண்டோம். பூனையும் ‘புர்ர்’ என்றது நானும் ‘புர்ர்’ என்றேனே அதே கணம்தான்.

அதே கணம் நீலத்திமிங்கலத்தை உற்று நோக்கினாலும் நிகழலாம் என்று நண்பர்கள் கடற்கரை ஊரொன்றுக்கு பயணம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சாதாரண இரவு பஸ்ஸில் சாதாரண நோக்கியா கைபேசியோடு பயணம் செய்தேன். பக்கத்து இருக்கையில் ஒரு குடிகாரன். தூங்கவிடாமல் தொடர்ந்து நான் என்ன கொடுக்கல் வாங்கல் வியாபாரம் செய்கிறேன் என்று கேட்டுக்கொண்டே   வந்தான். அவனிடமிருந்து தப்பித்து தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இரண்டு மணிக்கு தூங்கி நான்கு மணிக்கு விழிப்பு தட்டியபோது பக்கத்து இருக்கை குடிகாரன் என் சட்டை முழுக்க வாந்தி எடுத்திருந்தான்.

ஊர் போய் இறங்கியதும் ஹோட்டலில் காத்திருந்த நண்பர்களை சட்டைசெய்யாமல் நேரடியாக கணிணி முன் உட்கார்ந்து குடிக்கு எதிரான என் கட்டுரையை எழுதினேன். ஆவேசமாக டைப் செய்ததில் வழமை போலவே டிவிஸ் கீபோர்ட் உடைந்துவிட்டது. அந்தக் கட்டுரையின் முன் வடிவம் என் தளத்தில் பிரசுரமானபோது அந்தக் குடிகாரக் கவிஞர் என்னை மக்கு மண்டூகம் என்று திட்டினாராம். அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. அவர் வெறும் குடிகாரர் மட்டுமே. தமிழில் அவர் இடம் அதுதான்.

மாலையில் நண்பர்களும் நானும் கடற்கரைக்குச் சென்று ஓரமாக முட்டளவு தண்ணீரில் நின்று குளித்தோம். திமிங்கலங்கள்  கரையோரமெல்லாம் வருவதில்லையென்று மீனவர்கள் சொன்னார்கள். அறைக்குத் திரும்பி விடிய விடிய பேசினோம். நண்பர் ஒருவர் ‘நீலத்திமிங்கலங்கள் கண்டிட்டில்லோ’ என்ற மலையாளத் திரைப்பாடலை பெருங்குரலில் பாடினார். மற்றொருவர் நீலத்திமிங்கலங்களைப் பற்றிய நீலக் கதையொன்றை நான் எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மறு நாளே அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டோம். யாரோ பழைய எழுத்தாள நண்பர் என்று  நினைக்கிறேன் காஃகாவின் குட்டிக்கதைகளை பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நீலத்திமிங்கலங்களைப் பற்றி இனிமேல்தான் விக்கிப்பீடியாவில் தேட வேண்டும்.

2 comments:

காலப் பறவை said...

செம

;))

Anonymous said...

கலக்கிட்டிங்க...
நல்லா நோட் பண்றீங்க மனுஷனை...


S.Ravi
Kuwait