Monday, August 15, 2011

கரும் பூனைகள்


அவள் விட்டுச் சென்ற கரும்பூனை
பல முறை ஈன்றது
சிறிதும் பெரிதுமாய் 
படை படையாய் வீடு முழுக்க
சோபாவில், படுக்கையறையில், சமயலறையில்,
குளியலறையில், மேஜைக்கடியில்
ஆவேசமாய் உன்னைப் பிராண்ட
காத்திருக்கின்றன
உன் கண்களை பூனைகளின் கண்கள்
சந்திக்கத் தவறுவதேயில்லை
ரௌத்திர குட்டி ஒன்றின் பட்டுக் காதினை
அவளெனவே தடவி
மென்மையாய் முத்தமிடுகிறாய்
கதறிக் கிழிக்கிறது அது உன் கண்ணை
பாய்ந்து தாக்குகிறது
பூனைப் பட்டாளம்
உன் உடல் முழுக்க குருதி வழிய வழிய
கிறீச்சிட்டு கெக்கலித்து
கூரிய நகங்களால்
புணர்ச்சியின் வேகத்தோடு உன் உடல் முழுக்கக்
கிழிக்கின்றன
ஒப்புக் கொடுக்கிறாய் நீ
ஆனந்தமாய்

No comments: