Thursday, September 16, 2010

உணர் கொம்புகள்

தலையைக் கவிழ்த்து
சுவரோரக் கறைகளில் கண் பதித்திருந்தாள்

அவனோ உற்சாகமாய்த் தன் வேலையைப் பற்றி
கைகளை ஆட்டி
சிகரெட்டை புகைத்தவாறு
பலவாறாய்ப் பேசிக்கொண்டிருந்தான்

அவன் வார்த்தைகளில்
சுவர்க் கறைகள் வித வித
பிராணிகளாகிக்கொண்டிருந்தன
கம்பளிப்பூச்சிகளாய்
அட்டைகளாய்
நத்தைகளாய்
திரவம் பரப்பி
ஊர்ந்தன

அவற்றின் உணர் கொம்புகளை
அவிக்க
பெரிய தீவெட்டி ஒன்று
வேண்டுமென அவள்
வாய் விட்டு சொல்லி
தலை நிமிர்ந்தபோது

அவன் போய்விட்டிருந்தான்

No comments: