Wednesday, April 24, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-13

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-13

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழி கேட்கும்படி சொன்னது

—-

இயற்றியவர்: தொல்கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 14

திணை:  குறிஞ்சி

————

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையிற்றுச் சின்மொழி யரிவை

பெறுகதைல் லம்ம யானே பெற்றாங்

கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்

நல்லோள் கணவ னிவனெனப்

பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அமுதத்தின் இனிமை நிரம்பிய செவ்விய நாவானது, அஞ்சும்படி முளைத்த நேராகி விளங்குகின்ற கூர்மையான பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய தலைவியை நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக, பெற்ற பின்பு, இந்த ஊரிலுல்ளோர் அறிவாராக, பலர் வீதியில் நல்லோள் கணவன் இவன் எனக் கூற நாம் சிறிது நாணுவேம்!

————

வாசிப்பு

——

செவ்விய நாவும், கூர் பற்களும்

———

தலைவியின் செவ்விய நாவை ‘அமிழ்தென்றது எயிற்றில் ஊறிய நீரை, அமிழ்து பொதி எயிறு எனக் கூட்டுக” என்று எழுதுகிறார் உ.வே.சா. தலைவியைப் பற்றிய  இந்த விவரணை காமத்தின் உணர்ச்சிகரத்தில் தோய்ந்தது. அவளுடைய நாக்கு சிவப்பு, இனிப்பு, அமுதம் நிறைந்தது என்றது, பழுத்த காமத்தையும் துடிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்துவது. ஆயினும்கூட, அது ஒரு பொய்யான பயத்தின் தொடுதலால் உன்மத்தம் அடைகிறது. அவளுடைய நேரான, பிரகாசமான பற்களுக்கு பயம் என்று சொல்லப்பட்ட  மாறுபாடு ஒரு முரண்பாடு அல்ல, மாறாக அது முற்றிலும் காம இன்பத்தைப் பற்றிய ஒரு  முழுஈர்ப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சிகரமான அச்சத்தின் குறிப்பு. இந்தக் கலவை கவிதையின் உணர்வுச் செழுமையை (sensuousness) அதிகரிக்கிறது.  இப்படியான எதிரெதிரான காமக்கவர்ச்சியும் அச்சமும் நிறைந்த உணர்ச்சிகர படிமத்தை தலைவன் சொல்வது, அவனுடைய இப்போதைய நிலைமையின் போதாமையையும் (lack) அதற்காகத் தன் நிலைமையை மீறிய நிறைவை அடைய விரும்புவதையும் சொல்வதாக வாசிக்கலாம் (A desire to have a transcendental fulfillment). 


சிமோன் தி பூவா (Simone De Beauvoir) தன்னுடைய இரண்டாம் பாலினம் (Second Sex) நூலில் இப்படி உள்ளடுக்குகள் கொண்ட விருப்பத்தின் வெளிப்பாடுகள் ஒரு முழுமையான தன்னிலைக்கான தேடல்  என்றும் அது இன்னொரு நபரால் முழுமையடைகிறது எனவும் எழுதுகிறார்.

  

இந்தக் கவிதையிலும்  தலைவனின் விருப்பமானது தன்னை தலைவியோடு சேர்ந்து தன்னை முழுமைப்படுத்திக்கொள்வதில் இருக்கிறது என வாசிக்கலாம். அந்தத் தன்னிலையின் முழுமைக்காக அவன் மடலேறவும் தயாராக இருக்கிறான். 

உ.வே,சா. தன் பொழிப்புரையின்  மேற்கோளாட்சி பிரிவுகளில் மடலேறுதல் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தின் 16 பாடல்களில் வருவதாக எழுதுகிறார்.  தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும் எழுதியமைத்த படத்தைக் கையேந்தி பனைமடல் குதிரையின் மேல் செல்வது மடல் ஏறுதல் என்றழைக்கப்படுகிறது. 


மடல் ஏறுதலை காதல் விரக்தியின் உச்ச கட்ட செயல்பாடாகக் காணலாம். An act of extreme despair. 

———-

ஊரார் பார்வை

———-

மடலேறித் தலைவியை அடைந்த பின் ஊர் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய தலைவனின் சொற்கள் சுவாரஸ்யமானவை. 

"நான் அவளை அடைந்தவுடன், இந்த ஊரின தெருக்களில் பலர், ‘அவன் ஒரு நல்ல பெண்ணின் கணவன்' என்று கூறுவார்கள்,” என்று தலைவன் கூறுவது அவனது  ஆசை அவனது காதலியை சொந்தமாக்குவதில் மட்டும் இல்லை; அவளுக்குத் தகுதியானவளாக ஊராரால்  கருதப்பட வேண்டும் என்ற சமூக அங்கீகாரத்திற்கான ஏக்கமாகவும் இருக்கிறது.  அப்போது “நான் கொஞ்சம் வெட்கப்படுவேன்" என்ற இறுதி வரி, வெற்றியின் நுட்பமான இன்பத்தைச் சொல்கிறது. 

————

கவிதையில் கண்ணில்படாமல் கேட்கும் தோழி

———

‘தலைவன் தோழி கேட்கும்படி சொன்னது’ என்ற கவிதையின் கூற்று வடிவத்தை நாம் மறந்துவிடக் கூடாது;  கூற்றினைக் கவிதையில் கண்ணில் படாமல் கேட்கும் தோழி  கவிதைக்கு ஒரு  சுவையான அர்த்த அடுக்கினை சேர்க்கிறாள்.  தோழி தலைவனின் மௌன சாட்சியாக மாறுகிறாள், ஒருவேளை அவள் தலைவனின் கூட்டு சதிகாரியாகவும்  இருக்கலாம். அவளுடைய இருப்பு தலைவனின்  பிரகடனத்தின் ஆழமாக்குகிறது. மடலேறிவிடுவேன் என்ற அச்சுறுத்தலை தலைவிக்குக் கொண்டு சேர்க்கும் தூதுவராகவும் தலைவன் தோழியைப் பயன்படுத்தலாம். இந்தக் கவிதை ஒரு பெண்ணின் மீதான ஆணின் ஆசை பற்றியது மட்டுமல்ல. இது காதல் நாட்டத்தில் காணப்படும் பாதிப்பு, விளையாட்டுத்தனம்,  காமத்தின் உணர்ச்சிகரத்தில் தோய்தல், அதில்  கிளர்ச்சியடைதல் ஆகியவற்றையும் பற்றியது.  


இந்த போதையான கலவையை அறிந்த இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் சிலிர்ப்பும் கவிதையை அழகாக்குகிறது. 

——